குஜராத்தில் தொங்கு பாலம் விபத்துக்குள்ளான இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேலும் உடன் இருந்தார்.
குஜராத் மாநிலம் மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அதிக எடை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அறுந்து விழுந்து விபத்து நேரிட்டது.
அப்போது பாலத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் நதியில் விழுந்தனர். இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் உடனடியாக செயல்பட்டு மீட்டனர்.
எனினும் காணமல் போனவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து அவர்களைத் தேடும் பணிகளையும் மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 135ஆக அதிகரித்துள்ளது. 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து ஏற்பட்ட மோர்பி பகுதியையும், விபத்தில் காயமடைந்தவர்களையும் சந்திப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் விரைந்தார். பிரதமரின் வருகையையொட்டி மோர்பி அரசு மருத்துவமனையில் இரவோடு இரவாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் விபத்து நடைபெற்ற மோர்பி பகுதிக்கு பிரதமர் மோடி தனி ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கினார். அதனைத் தொடர்ந்து குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேலுடன் பிரதமர் மோடி விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
விபத்து நேரிட்ட மச்சு நதியில் குஜராத் மாநில மீட்புப் படையினர் காணாமல் போனவர்களைத் தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.