திரெளபதி முர்மு நாட்டின் முதன்மைக் குடிமகளாக பொறுப்பேற்றுள்ளது, பழங்குடி மக்களுக்கான புதிய தொடக்கம் என பழங்குடி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூலை 25) காலை பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து முப்படைகளின் மரியாதையையும் ஏற்றார்.
இந்த நிகழ்வில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய பழங்குடியின நல்வாழ்வுத் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் முதன்மைக் குடிமகளாகப் பொறுப்பேற்றுள்ளது பழங்குடி மக்களுக்கான புதிய தொடக்கமாக அமைந்துள்ளது. அரசியலமைப்பின் நிலைப்பாடு கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. இது புதிய வழிகளை அமைத்துக்கொடுக்கும் எனக் குறிப்பிட்டார்.