உ.பி. : கொலை வழக்கில் தொலைக்காட்சி நடிகர் கைது

நிலத்தகராறில் அண்டை வீட்டாரை துப்பாக்கியால் சுட்ட தொலைக்காட்சி நடிகர் பூபிந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.
உ.பி. : கொலை வழக்கில் தொலைக்காட்சி நடிகர் கைது

உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் நிலத்தகராறு தொடர்பான கொலைவழக்கில் தொலைக்காட்சி நடிகர் பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் இன்று (டிச.6) கைது செய்யப்பட்டனர். 

தொலைக்காட்சி நடிகரான பூபிந்தர் சிங் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்துள்ளார். அதில் சுட்டதில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

குவான்கேடா காத்ரி பகுதியைச் சேர்ந்தவர் பூபிந்தர் சிங். அவரது பண்ணை குர்தீப் சிங்கின் வீட்டின் அருகில் இருந்துள்ளது. அந்த பண்ணைக்கும், வீட்டிற்கும் இடையில் இருந்த யூகலிப்டஸ் மரம் தொடர்பான பிரச்சினையில் இருதரப்பும் மோதியுள்ளனர்.

அப்போது பூபிந்தர் சிங் தனது துப்பாக்கியால் குர்தீப் சிங்கின் குடும்பத்தினரை நோக்கி சுட்டுள்ளார். இதில் குர்தீப் சிங், அவரது மனைவி மீராபாய் மற்றும் அவர்களது மகன் பூடா சிங் ஆகியோர் படுகாயமடைந்தனர். குர்தீப் சிங்கின் மற்றொரு மகனான கோவிந்த் சிங் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு டிஐஜி முனிராஜ் விரைந்து வந்தார். பூபிந்தர் சிங் மற்றும் அவரது வீட்டு வேலையாட்களான கியான் சிங், குர்ஜார் சிங், ஜீவன் சிங் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நேற்று மாலை கியான் சிங் கைது செய்யப்பட்ட நிலையில் குர்ஜார் சிங் மற்றும் ஜீவன் சிங் ஆகியோர் தப்பியோடி விட்டனர். இந்நிலையில் இன்று பூபிந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். 

பூபிந்தர் சிங் 'ஜெய் மஹாபாரதம்' என்ற தொலைக்காட்சித் தொடரில் முதன்முதலாக நடித்தார். அதன்பிறகு 'ஏக் ஹசீனா தீ',  'தேரே ஷெஹர் மெய்ன்' உள்ளிட்ட தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com