புதுதில்லி: பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் வரும் நாள்களில் அடர்ந்த மூடுபனி மற்றும் குளிர் நிலைகள் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தில்லியில் வாரத் தொடக்கத்தில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்திருந்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், திடீரென வெள்ளி, சனி ஆகிய நாள்களில் முறையே 10.7 டிகிரி, 10.2 செல்சியஸாக பதிவாகியிருந்தது.
நாட்டின் வடக்குப் பகுதிகளில் குறிப்பாக பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்திருந்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்து மிகவும் அடர்ந்த மூடுபனி காணப்பட்டது, இதனால் ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேசிய தலைநகரில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை மிதமான மற்றும் அடத்தியான பனிமூட்டமும் அதன் பின்னர் தெளிவான வானமும் காணப்பட்டது. அதே சமயம், காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. வெப்பநிலை மீண்டும் பழைய நிலைக்கு வந்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் வரும் நாள்களில் அடர்ந்த மூடுபனி மற்றும் குளிர் நிலைகள் தொடரும். ராஜஸ்தானிலும் குளிர் நிலைகள் தொடரும்.
திங்கள்கிழமை (ஜன. 2) காலை வேளையில் அடா்த்தியான மூடுபனியும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தில்லியைப் பொறுத்தவரை, ஜனவரி 3 ஆம் தேதி வெப்பநிலை மேலும் குறையும் மற்றும் குளிர் நிலை புதிய உச்சநிலையை அடையும் என தெரிவித்துள்ளது.
தில்லியில் நாளை அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 மற்றும் 6 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.