தேர்தல் பிரசாரக் கூட்டத்தை தொடங்கும் மாயாவதி!
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அடுத்த வாரம் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை தொடங்கவிருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றம் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கிறார்.
இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி கூறுகையில்,
கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் எட்டு தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மாயாவதி பங்கேற்று உரையாற்றுவார்.
மேலும், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவில் இரண்டு தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றுகிறார்.
தொழிலாளர்களையும், ஆதரவாளர்களையும் திரட்டி தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கான ஆயத்த பணிகளைத் தொடங்குமாறு கட்சியின் மாநிலத் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் நவ. 6, 7, 8, 14 ஆகிய தேதிகளிலும், ராஜஸ்தானில் நவ. 17, 18, 19, 20 ஆகிய தேதிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படும்.
நவம்பர் 9ஆம் தேதி சத்தீஸ்கரில் 2 தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும், நவம்பர் 22,23-ம் தேதி தெலங்கானாவில் 2 தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் மாயாவதி உரையாற்றுகிறார்.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் கோண்ட்வானா காந்தந்த்ரா கட்சியுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது.
ராஜஸ்தான், தெலங்கானாவில் அக்கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.