தீர்வை நோக்கிப் பேச விவசாயிகள் முன்வர வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் அர்ஜுன் முண்டா, பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒத்துழைத்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பொதுமக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது அரசின் நோக்கமாக உள்ளது.
புதிய சட்டங்கள் தொடர்பாக பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அடுத்தடுத்த நாள்களில் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
விவசாய சங்க பிரதிநிதிகள் தீர்வு நோக்கி பேசுவதற்கு பதிலாக பிரச்னைகளை நோக்கி மட்டுமே விவாதிக்கின்றனர். இது பொதுமக்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முன்னெடுப்புகளை விவசாய சங்கங்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்தராய் ஆகியோர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாத சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்யுக்தா கிசான் மோச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 அமைப்புகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.