
மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, ஆம் ஆத்மி, சிவசேனை(உத்தவ் அணி), திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் பதாகைகளுடன் முழக்கமிட்டனர்.
தமிழ்நாடும் இல்லை.. திருக்குறளும் இல்லை, தமிழகத்துக்கு நிதி எங்கே போன்ற பதாகைகளுடன் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என இந்தியா கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
மேலும், ஆந்திரம், பிகார் ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை அறிவித்து, மற்ற மாநிலங்கள் மீது பாரபட்சம் காட்டியுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதேபோல், ஜூலை 27-ஆம் தேதி பிரதமா் தலைமையில் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தை இந்தியா கூட்டணி ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள் புறக்கணிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.