
ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது என்று சிந்து நதி நீர் குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் நாட்டு மக்களுடன் முதல்முறையாக ஆற்றிய உரையில் இதனை அவர் தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி அறிவித்த நடவடிக்கைகளில் முக்கியமாக, அந்த நாட்டுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் இந்தியா அறிவித்தது. இரு நாடுகளிடையே உலக வங்கி மத்தியஸ்தம் செய்ததன் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கடந்த 1960-ஆம் ஆண்டு கையொப்பமானது.
ஆக்கிரமிப்பு பஞ்சாப், சிந்து பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயத்துக்கு இந்த நதிநீரையே பாகிஸ்தான் முழுமையாக நம்பியுள்ளது. இந்தச் சூழலில், இந்த நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது, பாகிஸ்தானின் வேளாண் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.
இந்தநிலையில், பாகிஸ்தானுக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பல்லாண்டுகள் பழமை வாய்ந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்படுத்தப்படுமா என்பதை பிரதமர் மோடி இன்று தமது உரையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
“ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது. வர்த்தகமும் பயங்கரவாதமும் ஒருங்கே பயணிக்க இயலாது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இனி பேச்சு நடந்தால், அது பயங்கரவாதத்தையும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகளை குறித்தும் மட்டுமே பேச்சுவார்த்தை இருக்கும்” என்றார்.
இதையும் படிக்க: சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே! - பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.