ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை
சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் செவ்வாய்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு திடீரென சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 18 டாக்டர்கள் இருக்க வேண்டிய நிலையில் 6 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களும் பகல், இரவு பணி மாற்றி பார்ப்பதால் சராசரியாக தினம் வரும் புற நோயாளிகள் 1500 பேரை பார்க்க 3 டாக்டர்களே உள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனை அறிந்து தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் செவ்வாய்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு திடீரென சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை, நகரின் மையப் பகுதியில் பஸ்நிலையத்தின் மிக அருகில் இருப்பதால் இந்த மருத்துவமனையை சங்கரன்கோயிலில் இருந்து டி.கல்லுப்பட்டி வரையுள்ள மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் செங்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் சாலை விபத்துக்களில் காயம் அடைவோர் இங்கு கொண்டுவரப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தினமும் சுமார் 1500 புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு 18 டாக்டர்கள் பணியிடம் உண்டு. இதில் தற்போது 7 காலிப்பணியிடம். டாக்டர் கணேஷ்பாபு மாற்றுப் பணிக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் மூன்று மாதங்களாக உள்ளார். டாக்டர் கிருத்திகா என்பவர் மதுரை ராஜாஜீ அரசு மருத்துவமனைக்கு டைவர்சனாகி சென்றுவிட்டார். டாக்டர்கள் செல்லபாஸ்கர், ரமேஷ் ஆகியோர் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளார்கள். மொத்தம் 6 டாக்டர்களில் இருக்கும் ஒரு பெண் மருத்துவர் விடுப்பில் சென்றாலும் மகப்பேறு பார்க்க இயலாத நிலை. இருக்கும் மருத்துவர்கள் பகல், இரவு பணி பார்க்கும் போது சராசரியாக புற நோயாளிகளை பார்க்க 3 அல்லது இரு டாக்டர்களே இருக்கிறார்கள்.
மொத்தம் 9 துப்புரவு பணியாளர் பணியிடம் இங்கு உள்ளது. ஆனால் தற்போது ஒரு இளைஞரும், ஒரு மூதாட்டியும் உள்ளார்கள். பகலில் ஒருவர், இரவில் ஒருவர். எவ்வாறு எவ்வளவு பெரிய மருத்துவமனையை சுத்தம் செய்து, கழிப்பறைகளை சுத்தம் செய்ய இயலும். நடைமுறையில் மருத்துவமனையை துப்புரவாக பராமரிக்க இயலுமா?
தற்போது காய்ச்சல் சீசனில் ஏழை பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு வந்து திண்டாடுகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் அரசு மருத்துவமனையின் நிலையை அறிந்து தனியார் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.
இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மேட்டுத் தெருவைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மனைவி பிரேமா விஜி, பிரசவத்திற்காக வந்துள்ளார். அங்கு பெண் மருத்துவர் புஷ்பலதா விடுப்பில் இருந்ததால், ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்துள்ளார்கள். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு உடனே கொண்டு சென்றால் தான் தாயையாவது காப்பாற்ற இயலும் எனக் கூறியுள்ளார்கள். குழந்தை இறந்த நிலையில் தாய் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை அறிந்த தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் அரசு மருத்துவமனைக்கு திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நேற்று மாவட்ட ஆட்சியரிடம் இந்தப் பெண்ணுக்கு உரிய சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கூறினேன். மருத்துவ இணை இயக்குநர் உங்களிடம் பேசுவார் என்றார் ஆட்சியர். இப்போது வரை பேசவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள், பணியாளர்களை நிமிக்கக் கோரி சென்னையில் பல தடவை மனு அளித்துள்ளேன். நடவடிக்கை இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி பெருமளவு போராட்டம் நடத்த இருப்பதாகக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...