வத்தலகுண்டு அருகே வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உறவினர்கள் சென்று கொண்டிருந்த லாரி தலைக்குப்புற கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
காமராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் வளைகாப்புக்காக மீனாட்சி புரம் சென்று கொண்டிருந்தனர். லாரியில் சுமார் 56 பேர் ஏறியிருந்தனர். இந்த லாரி வேகமாகப் போகும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காமாட்சியின் மனைவி புஷ்பம் (45) சம்பவ இடத்திலேயே பலியானார். 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மதுரை, தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.
லாரியில் சென்ற 30 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய லாரியின் ஓட்டுநர் பிரபு தலைமறைவாகிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வத்லகுண்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.