தமிழகத்திற்கு சேவை செய்ய மாபெரும் வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழகத்திற்கு சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, 133 சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார். அதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
பின்னர் ஆளுநர் மாளிகையில் முதல்வரும், அமைச்சர்களும் ஆளுநருடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, முதல்வர், அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
பதவியேற்பு விழா நிறைவுற்ற பின்னர் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்குப் பிறகு இன்று பிற்பகல் தலைமைச் செயலகம் வந்த அவர் அரிசி குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.4,000, ஆவின் பால் விலைக் குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.