இசக்கிமுத்து எனும் உடன்பிறப்பின் மனம் திறந்த மடல்... மசிவாரா செயல்தலைவர் ஸ்டாலின்?!

செயல்தலைவர் ஸ்டாலின், உடன்பிறப்பின் இந்த மனம் திறந்த மடல் கண்டு மசிவாரா? மாட்டாரா? எனத் தேர்தல் நெருங்கி வந்தால் தெரியும்.
இசக்கிமுத்து எனும் உடன்பிறப்பின் மனம் திறந்த மடல்... மசிவாரா செயல்தலைவர் ஸ்டாலின்?!

திமுகவில் சகோதரர்களான செயல்தலைவர் ஸ்டாலினுக்கும், அஞ்சா நெஞ்சர் அழகிரிக்கும் எப்போதும் ஏழாம்பொருத்தமே! இவர்கள் இருவருக்குமிடையிலான பனிப்போர் அன்றும், இன்றும், எப்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் சமயம் கிடைக்கும் போதெல்லாம் பூடகமாக மட்டம் தட்டிப் பேசிக் கொள்ளத் தவறியதே இல்லை. இந்நிலையில் அழகிரி ஆதரவாளரான இசக்கி முத்து எனும் திமுக தொண்டர் மக்களின் பார்வையில் அவரது எதிரி முகாம் தலைவர் எனக் கருதப்படும் திமுக  செயல்தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு மனம் திறந்த மடல் எழுதி அனுப்பியுள்ளார். அந்த மடலில் அவர் வலுயுறுத்தியுள்ள விஷயம் சகோதரர்கள் இருவரும் புரிந்து கொள்ள வேண்டியது மட்டுமல்ல. காலத்திற்கேற்றவாறு ஏற்று பின்பற்றியாக வேண்டிய ஒன்றாகவும் தற்போது திமுக உடன்பிறப்புகளால் கருதப்படுகிறது. அந்த மடலில் அப்படியென்ன எழுதியிருக்கிறார் இசக்கி முத்து என்கிறீர்களா?

பொதுவெளியில் ஸ்டாலினும், அழகிரியும் எப்போதும் ஒருவருக்கொருவர் விரோதிகளாகவே தங்களை வெளிக்காட்டி வருகின்றனர். சமீபத்தில் அழகிரி, ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேஷம் பற்றிய கேள்விக்கு சாக்கடைக்கு வந்த குப்பை எனப் பதிலளித்தார். திமுகவின் தோல்விகளுக்கு காரணமே ஸ்டாலினின் அணுகுமுறைகள் தான் என்பது அழகிரியின் வாதம். அழகிரி இப்படி வெளிப்படையாக விரோதத்தைக் காட்டிய போதும், ஸ்டாலின் வெளிப்படையாக அழகிரியை விமர்சித்துப் பேசாவிட்டாலும் அழகிரியை சுத்தமாகக் கட்சியிலிருந்து துடைத்தெறிந்த பெருமை ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்களையே சாரும் என்பது அப்பட்டமான உண்மை. பொது மேடைகளில் அழகிரி குறித்து வெளிப்படையாக ஸ்டாலின் தனது காட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனினும் இருவருக்கிடையிலான துவந்த யுத்தம் முடிவின்றி நீண்டு கொண்டே தான் செல்கிறது. சகோதரர்களுக்கிடையிலான இந்த அதிகாரப் போரில் வயோதிக காலத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதும் கூட கருணாநிதியின் உடல்நலக் கோளாறுக்கு ஒரு காரணமே! பிரிந்து நிற்கும் இருவரையும் இணைத்து வைக்க குடும்ப உறுப்பினர்கள் சிலர் முயன்ற போதும், ஒவ்வொரு முறையும் அந்த முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராயின.

அதனால் தான் சமீபத்தில் அழகிரி ஆதரவாளர் இசக்கி முத்து, திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு எழுதிய மடல் இத்தனை முக்கியத்துவம் பெற்றதாக ஊடகங்களில் கருதப்படுகிறது. அந்த மடலில் இசக்கி முத்து, தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் திமுக உடன்பிறப்புகள் இரு சகோதரர்களின் தலைமையில் பிரிந்து நிற்பது சரியல்ல. தேர்தல் பணிகளில் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் திமுக இந்த முறை பலத்த வெற்றி பெற வாய்ப்பு உண்டு. எனவே ஸ்டாலின் தனது சகோதரர் மீதான பழைய மனவருத்தங்களை மறந்து அவரோடு கை கோர்த்துச் செயல்பட முன் வரவேண்டுமென்பதே உண்மையான  திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே பகையை மறந்து சகோதரர்கள் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் அது உடன்பிறப்புகள் அனைவருக்கும் புதிய எழுச்சியைத் தரக்கூடும் என்றும் இசக்கி முத்து தனது மடலில் குறிப்பிட்டிருக்கிறார்.

செயல்தலைவர் ஸ்டாலின், உடன்பிறப்பின் இந்த மனம் திறந்த மடல் கண்டு மசிவாரா? மாட்டாரா? எனத் தேர்தல் நெருங்கி வந்தால் தெரியும்.

Image courtesy: Financial express.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com