சுகம் தரும் சித்த மருத்துவம்: புராஸ்டேட் கோளத்தின் நலனை காக்குமா ஆளி விதை?

நாற்பதைக் கடந்து வரும் ஆண்களுக்கு சவால் விடும் மற்றுமொரு நோய்நிலை தான் புராஸ்டேட் கோளம் சார்ந்த நோய்நிலைகள்.  
சுகம் தரும் சித்த மருத்துவம்: புராஸ்டேட் கோளத்தின் நலனை காக்குமா ஆளி விதை?

சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இருதய நோய்கள், சிறுநீரக நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் இன்றைய வாழ்வியலில் நாற்பது வயதைக் கடந்த ஆண்கள் பலரையும், நான்கு புறமும் சுற்றிக்கொண்டு, உடலையும் மனத்தையும் கெடுத்து, பாடாய் படுத்தும் நோய்நிலைகளில் முக்கிய இடத்தை பிடிப்பன. இத்தகைய நோய்களை சுமந்துகொண்டு, நாற்பதைக் கடந்து வரும் ஆண்களுக்கு சவால் விடும் மற்றுமொரு நோய்நிலை தான் புராஸ்டேட் கோளம் சார்ந்த நோய்நிலைகள்.  

புராஸ்டேட் சுரப்பி ஆண்களுக்கு அடிவயிற்று பகுதியில் மலக்குடலுக்கு முன்புறமாக இருக்க கூடிய ஒரு உறுப்பு. முக்கியமாக புராஸ்டேட் சுரப்பியில் நாற்பது, ஐம்பதைக் கடந்த ஆண்களுக்கு வரக்கூடிய நோய்நிலையில் முக்கியமானவை இரண்டு தான். ஒன்று தீங்கில்லாத புராஸ்டேட் கோள உருப்பெருக்கம் (BPH) மற்றொன்று புரோஸ்டேட் கோள புற்றுநோய். இவை இன்றைய நவீன வாழ்வியலில் ஆண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆரோக்கிய சவாலாக உள்ளது. அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் ஆண்களின் ஆயுட்காலத்தை குறைப்பதும் இந்த புற்றுநோய் தான்.

பீபிஎச் (BPH) எனும் தீங்கில்லாத புராஸ்டேட் கோள உருப்பெருக்கம் என்பது சராசரியாக 50 வயதைக் கடந்த ஆண்களில் 50 சதவீதம் பேருக்கு ஏற்படக்கூடியது. அதுவே ஆண்கள் 70 வயதைக் கடக்கும்போது 75 சதவீதம் பேருக்கு ஏற்படுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. புரோஸ்டேட் கோள புற்றுநோயை பொருத்தமட்டில் கிட்டதட்ட 3 சதவீதம் ஆண்கள் மட்டுமே புற்றுநோயின் விளைவாக இறக்கின்றனர் ஆனால் உண்மையில் 100 சதவீதம் ஆண்கள் புரோஸ்டேட் புற்றுநோய் செல்கள் இருப்பதை  கண்டறியப்படாமல் தங்கள் வாழ்நாளை கடப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகிவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக ஆண்கள் இத்தகைய  புரோஸ்டேட் கோளம் சார்ந்த நோய்நிலையின் குறிகுணத்தை அறிந்துகொண்டு நோயினை வருமுன் காப்பது நல்லது.

மேற்கூறிய இரண்டு நோய்நிலையால் விரிவடையும் புரோஸ்டேட் கோளமானது சிறுநீர் குழாயைக் கட்டுப்படுத்துகிறது, இதனால் சிறுநீர் கழிப்பதில் குறுக்கீடு மற்றும் பலவீனமான சிறுநீர் ஓட்டம் ஏற்படுகிறது. சிறுநீர்ப்பை சுருங்கி விரிவதனால் சிறிய அளவு சிறுநீர் சேர்ந்தாலும் கூட அவசரமாக கழிக்கும் எண்ணமும், அடிக்கடி கழிக்க வேண்டும் என்ற எண்ணமும், முக்கியமாக  இரவில் அதிகமுறை சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீர் சிறுக கசிதல் போன்ற பல குறிகளை உண்டாக்கி ஆண்களை துன்பத்தில் ஆழ்த்தும். இதனால் சிறுநீர் தொற்றுகளும் அதிகம் உண்டாக வாய்ப்பாக உள்ளது.

மேற்கூறிய நோய்நிலையில் இருந்து ஆண்கள் தங்களை காத்துக்கொள்ளவும், ஆயுட்காலத்தைக் கூட்டிக் கொள்ளவும் பயன்படும் வகையில் உள்ள முக்கிய சித்த மருத்துவ மூலிகை தான் 'ஆளி விதை'. 'பிளாக்ஸ் சீட்' என்ற பிரசத்தி பெற்ற இந்த மூலிகை உலகம் முழுவதிலும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆளி விதை ப்ரோஸ்டேட் சார்ந்த நோய்நிலையில் நல்ல பலன் தரும் என்பதை 'ஓக்காளம் மீளி அருசி விதைவாதமும் போகும் ஆளிவிதை தன்னால் அறி’ என்ற சித்த மருத்துவத்தின் அகத்தியர் குணவாகட பாடல் வரிகளால் அறியலாம்.

ஆளி விதையில் சுமார் 75 சதவீதம்  செல்லுலோஸ், 15 சதவீதம் ஹெமிசெல்லுலோஸ், 2.5 சதவீதம் பெக்டின்கள் மற்றும் 2 சதவீதம் லிக்னின்கள் உள்ளன. மேலும் ஆளிவிதை லினோலினிக் அமிலம், லினோலிக் அமிலம், பெப்டைடுகள், பாலிசாக்கரைடுகள், அல்கலாய்டுகள், சயனோஜெனிக் கிளைகோசைடுகள் உள்ளிட்ட பல உயிரி வேதிப்பொருட்களை கொண்டுள்ளது. இதில் உள்ள ‘லிக்னின்’ வகை வேதி மூலக்கூறுகள் அதன் மருத்துவ குணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளன. மேலும் இதில் நீரில் கரையும் நார்ச்சத்து அதிகம் உள்ளதும் சில மருத்துவ குணத்தை அளிப்பதாக உள்ளது. 

மேலும் ஆளி விதை எனும் பிளாக்ஸ் சீட் மூலிகையானது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதாகவும், ரத்த குழாயில் கொழுப்பு அடைப்பினை தடுப்பதாகவும், நார்சத்துகள் அதிகம் உள்ளதால் ரத்தத்தில் கொழுப்பினை குறைப்பதாகவும், இதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுப்பதாகவும், நார்சத்தினால் மலச்சிக்கலை போக்குவதாகவும், இயற்கை நிறமிகளை கொண்டுள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும், புற்றுநோயினை வரவொட்டாமல் தடுக்கும் தன்மையும் உடையதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.  

லிக்னன் எனும் வேதிப்பொருளை அதிகம் கொண்ட ஆளி விதையானது தீங்கில்லாத புராஸ்டேட் கோள உருப்பெருக்கத்தில் நல்ல பலனை தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் தீங்கில்லாத வீக்கம் பின்னாளில் புற்றுநோயாக மாறாமல் தடுக்கும் தன்மை உடையதாகவும் ஆய்வுகள் கூறுவது சிறப்புமிக்கது.

மேற்கூரிய மருத்துவ குணங்களுக்கு தினசரி 15 முதல் 40 கிராம் வரை ஆளிவிதையை எடுத்துக்கொள்ள நவீன அறிவியல் பரிந்துரைக்கிறது. முக்கியமாக அதிகப்படியான நீருடன் கலந்து எடுத்துக்கொள்வது நல்லது. இதன் விதையில் தயாரிக்கப்படும் எண்ணெய்க்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. புராஸ்டேட் கோள நோய்நிலைகளை கணிக்கும் முக்கிய ரத்த பரிசோதனை அளவான பிஎஸ்ஏ (PSA) -வை குறைப்பதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுவது கூடுதல் சிறப்பு.

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த ஆளிவிதையை முறைப்படி  எடுத்துக்கொள்வது என்பது மிகுந்த நன்மை பயக்கும். ஏனெனில் மற்ற மருந்துகளோடு இதனை எடுத்துக்கொள்ளும் விதம், ஆளிவிதையை உணவுடன் சேர்த்தோ அல்லது மருந்தாக எடுக்கும் போது பிற நோய்நிலைகளோடு உண்டாகும் குறுக்கீடு ஆகிய சிலவற்றை கருத்தில் கொண்டு அளவோடு, மருத்துவ ஆலோசனையோடு பயன்படுத்துவது நல்லது. அதே போல் ஆளி விதையானது உடலில் ஹார்மோன் மாற்றங்களை உண்டாக்கும் தன்மை உடையதால் கருவுற்றிருக்கும் பெண்களுக்கும் ஏற்புடையது அல்ல.

வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ஆளிவிதையை நம் நாட்டினர் வெளிநாட்டு மூலிகையாக எண்ணுகின்றனர். உண்மையில் அதிகப்படியான ஆளி விதை உற்பத்தியில் இந்தியா தான் முதலிடம் என்பது மட்டுமின்றி, சித்த மருத்துவத்திலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆளி விதையின் மருத்துவ குணம் பற்றி கூறியிருப்பது ஆச்சர்யத்திற்குரியது. எனவே ஐம்பதைக் கடந்து ஆரோக்கியத்தை நாட விரும்பும் ஆண்கள் பலரும் ஆளி விதையை நாடுவது நலத்திற்கு நன்மை பயக்கும்.

தொடர்புக்கு... இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com