அரசியல்வாதிகளை மிமிக்ரி செய்து ரயிலில் பொம்மைகளை விற்ற இளைஞர் கைது!
By RKV | Published On : 03rd June 2019 02:29 PM | Last Updated : 03rd June 2019 02:29 PM | அ+அ அ- |

ரயிலில் தன் வயிற்றுப்பாட்டிற்காக பொம்மை விற்கும் இளைஞரால் என்ன செய்து விட முடியும் நம் மாண்பு மிகு அரசியல் தலைவர்களை? அவர்களால் ஏன் சகித்துக் கொள்ள முடியவில்லை இந்த இளைஞரின் அற்ப மிமிக்ரியை? அது சரி சிறு புல் தானே என்று கண்டும் காணாதும் விட்டால் பிறகது வளர்ந்து வலிமையான மூங்கிலாகி விட்டால் வேரறுப்பது கடினம் என்று நினைத்திருக்கலாம். விஷயம் இது தான். சூரத் ரயில் நிலையைத்தில் அவினேஷ் துபே என்ற இளைஞரை கடந்த வெள்ளியன்று சூரத் ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர். காரணம், அவர் ரயில்களில் பொம்மை விற்கும் போது நகைச்சுவையாக அரசியல்வாதிகளை மிமிக்ரி செய்து பயணிகளை மகிழ்வித்து பொம்மைகள் விற்பது வழக்கம். அவரது விற்பனைப் பாணி வித்யாசமாக இருக்கவே அதைச் சிலர் விடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பி விட்டுள்ளனர். அந்த விடியோ பட வேண்டியவர்கள் கண்களில் பட்டால் சும்மா இருப்பார்களா?
அவினேஷ், கேலியாக மிமிக்ரி செய்த நபர்களில் மாண்பு மிகு பாரதப் பிரதமர் மோடிஜியும் ஒருவர். இது போதாதா, அவர் மீது சட்டம் பாய? பிரதமரை மிமிக்ரி செய்யும் அளவுக்கு வந்து விட்டாயா? என்று கொதித்துப் போன ரயில்வே போலீஸார் வெள்ளிக்கிழமை அந்த இளைஞரை ‘ரயில்வே சட்டம் 1989 இன் படி வெவ்வேறு விதமான செக்ஷன்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
கைது செய்யப்பட்ட அவினேஷை உள்ளூர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை அன்று ஆஜர் செய்தனர். அப்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவினேஷை 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. அத்துடன் குற்றத்தை ஒப்புக் கொண்ட வகையில் அவினேஷுக்கு ரூ 3,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
அவினேஷின் கைதை எப்படி அணுக வேண்டும்?
இனிமேல் பாரதப் பிரதமர் போலவோ அல்லது வேறு யாரேனும் அரசியல்தலைவர்களைப் போலவோ மிமிக்ரி செய்யும் அடிப்படை கருத்து உரிமை மற்றும் பேச்சு உரிமைகளை சாமான்ய மக்களிடம் இருந்து பறிக்கப்பட வேண்டும் என்றோ, அல்லது அரசியல் தலைவர்கள்(!!!) எல்லோரும் மிமிக்ரி திறமைக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை மிமிக்ரி செய்ய முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றோ சூரத் ரயில்வே போலீஸாரும், இந்த மத்திய, மாநில அரசுகளும் பறைசாற்ற முயல்கின்றனவா? மிமிக்ரி என்பது ஒரு கலை. எல்லோருக்கும் எளிதில் வந்து விடாது அந்தக் கலை. அதை நகைச்சுவையாக அணுகுவது தான் தலைவர்களுக்கான பண்புகளாக இருக்க முடியும். சகித்துக் கொள்ள முடியாமை சர்வாதிகாரிகளின் பாணி. அதைத்தான் இந்த அரசு கடைபிடிக்க நினைக்கிறதோ என்னவோ? என்றெல்லாம் இந்தச் செய்தியை அறிந்த நெட்டிஸன்களில் பலர் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். ரயில்வே போலீஸாரின் செயலை நியாயம் என்று வாதிடும் சிலரோ, ஒரு நாட்டின் தலைவர்கள் என்று கருதப்படக்கூடியவர்களை இன்ன விதத்தில் தான் பகடி செய்ய வேண்டும், மிமிக்ரி செய்ய வேண்டும் என்று வரம்புகள் உண்டு. வரம்பு மீறிச் செயல்பட்டால் இது தான் கதி என்று இடித்துரைக்கவும் மறக்கவில்லை.