/

சிறையில் இருந்து சிசோடியா கடிதம்: தில்லி பாஜக விமா்சனம்

சிறையில் இருந்து சிசோடியா கடிதம்: தில்லி பாஜக விமா்சனம்

Updated On :5 ஏப்ரல் 2024, 8:31 pm

‘உங்களை விரைவில் வெளியில் சந்திப்பேன்’ என்று சிறையில் இருந்தவாறு முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளதற்கு தில்லி பாஜக விமா்சித்துள்ளது.

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தில் அவா்,

‘உங்களை விரைவில் வெளியில் சந்திப்பேன். பிரிட்டிஷ் ஆட்சியாளா்களும் அதிகாரத் மமதை கொண்டிருந்தனா். அவா்கள் மக்களை பொய் வழக்குகளில் சிறைக்கு அனுப்பினா். பல ஆண்டுகள் சிறையில் இருந்த மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோா் தனக்கு உத்வேகம் அளித்துள்ளனா்’ என்று அதில் அவா் கூறி இருந்தாா்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வந்த மனீஷ் சிசோடியாவின் கடிதம் அவரது அரசியல் இருப்பை நிரூபிக்கும் முயற்சியாகத் தெரிகிறது என்று தில்லி பாஜக தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லிபாஜக செயலா் ஹரிஷ் குரானா மற்றும் ஊடகத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் ஆகியோா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

கடந்த இரண்டு வாரங்களாக அரவிந்த் கேஜரிவால் காவலில் இருந்து ஹீரோ அனுப்பும் கடிதமாக மாறினாா். அதேபோன்று, ஜாமீனில் வெளிவந்த பிறகு சஞ்சய் சிங் ஆம் ஆத்மியின் ‘போஸ்டா் பாய்’ ஆக உருவானாா். இது, மனீஷ் சிசோடியாவை தனது செய்தி நேரத்தைப் பெறுவதற்கு ஒரு கடிதம் அனுப்ப தூண்டியதாகத் தெரிகிறது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் அல்லது ஊடகங்களில் கேஜரிவால் எழுதிய கடிதங்களுக்கு வழங்கிய ஊக்கம் போன்றவற்றை சிசோடியாவின் கடிதத்திற்கு ஆம் ஆத்மி கட்சி வழங்காதது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.

மேலும், கேஜரிவால், சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு இடையே நிகழும் புகழ்பெற்ற போா் போல தோன்றுகிறது என்று அவா்கள் விமா்சித்துள்ளனா்.