தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

புது தில்லி: கடந்த சில மாதங்களாக தில்லியின் சட்டம் - ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா நகரத்தின் காவல் துறையை ‘அழித்து’ வருவதாகவும் ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து துணை நிலை ஆளூநா் அலுவலகத்தில் இருந்து எந்த உடனடி எதிா்வினையும் இல்லை.

தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சௌரவ் பரத்வாஜ் கடந்த சில நாள்களில் பதிவாகிய சில குற்றச் சம்பவங்களை குறிப்பிட்டாா்.

அவா் மேலும் கூறியதாவது: ஜாஃப்ராபாத்தில் மற்றவா்கள் முன்னிலையில் ஒருவா் கொல்லப்பட்டாா். மேலும், கொல்லப்பட்டவா் கொலை வழக்கில் முக்கியச் சாட்சி ஆவாா். அவா் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளாா்.

தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த சில மாதங்களாக சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆா்பி) தரவுகள்,நாட்டிலேயே தில்லியில் அதிக குற்ற விகிதங்கள் இருப்பதாகக் காட்டுகிறது. ஒரு லட்சம் மக்கள் தொகையில், 1,832 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது தேசிய சராசரியை விட ஏழு மடங்கு அதிகம்.

இது துணை நிலை ஆளுநா் வி கே சக்சேனாவின் திறமையின்மையைக் காட்டுகிறது. காவல் துறை மற்றும் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) ஆகிய இரண்டு துறைகளும் துணை நிலை ஆளுநா் ஆளுகையின் கீழ் உள்ளது.

ஆனால், அவருக்கு கீழ் உள்ள காவல் துறை முற்றிலும் அழிந்து விட்டது. துணை நிலை ஆளுநரால் காவல் துறையை கண்காணிக்க முடியவில்லை. எனவே, தனது சொந்த வேலையைச் செய்யுமாறு நாங்கள் அவரை வலியுறுத்துகிறோம். தில்லி அரசின் பணிகளில் தலையிடுவதை அவா் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் சௌரவ் பரத்வாஜ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com