

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாக, அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி விடுவித்தது.
அதன்படி, சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட 10 அணிகளும் தங்களிடம் இருக்கும் தொகைக்கு ஏற்ப மினி ஏலத்தில் பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.
அந்த வகையில் மினி ஏலத்தில் பங்கேற்கும் கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், குறைந்தபட்சமாக மும்பை அணியிடம் ரூ.2.75 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளது.
அதேவேளையில், சென்னை (ரூ.43.40 கோடி), , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ரூ.16.40 கோடி), ஹைதராபாத் (ரூ.25.50 கோடி), குஜராத் (ரூ.12.90 கோடி), ராஜஸ்தான் (ரூ. 16.05 கோடி), தில்லி (ரூ. 21.80 கோடி), லக்னௌ (ரூ. 22.95 கோடி), பஞ்சாப் (ரூ. 11.50 கோடி) தொகையை வைத்துள்ளன.
இந்த நிலையில், டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறும் மினி ஏலத்தில் பங்கேற்க 14 நாடுகளைச் சேர்ந்த 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஏலத்தில் 10 அணிகள் சேர்ந்து 77 பேரை ஏலத்தில் எடுக்கலாம்.
அனைத்து அணிகளிலும் மொத்தம் 77 அணி இடங்களுக்காக வீரர்களில் 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வீரர்களில் கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், ஸ்டீவ் ஸ்மித், பென் டக்கெட், ஜானி பேர்ஸ்டோ, ஜேமி ஸ்மித், ரச்சின் ரவீந்திர, ஷாய் ஹோப், அகீல் ஹொசைன் மற்றும் அல்சாரி ஜோசப், டேவிட் மில்லர், லியாம் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பலரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
ரூ.2 கோடி அடிப்படை விலையில் முஜீபுர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஜெரால்ட் கோட்ஸி, லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ஜே, மதீஷா பதிரானா, மஹீஷ் தீக்ஷனா மற்றும் ஹசரங்கா போன்றவர்கள் உள்ளனர்.
கொல்கத்தா அணியின் ரஸ்ஸல், வேறு அணிக்கு விளையாட விருப்பமில்லை எனத் தெரிவித்து ஓய்வுபெற்ற நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மேஸ்வெல், மினி ஏலத்தில் தனது பெயரைப் பதிவு செய்யவில்லை. கடந்தாண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஏழு போட்டிகளில் 48 ரன்களும், 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்த அவர், காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினார்.
ஏலத்தில் குறிப்பிடத்தக்க ஆல் ரவுண்டர்களாக ரஸ்ஸல், மேஸ்வெல் உள்ளிட்டோர் விலகியுள்ளதால், ஆஸ்திரேலிய அணி வீரர் கேமரூன் க்ரீனுக்கு இந்த ஏலத்தில் ஜாக்பாட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் க்ரீனுக்கான ரூ.25 கோடி வரை போட்டி போடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வீரர்களான மயங்க் அகர்வால், கே.எஸ். பரத், ராகுல் சாஹர், ரவி பிஷ்னோய், ஆகாஷ் தீப், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர் , சர்பராஸ் கான், சிவம் மாவி, நவ்தீப் சைனி, சேத்தன் சகாரியா, குல்தீப் சென், பிரித்வி ஷா, ராகுல் திரிபாதி, சந்தீப் வாரியர் மற்றும் உமேஷ் யாதவ் போன்ற பல பிரபல வீரர்கள் பலரும் இந்த ஏலத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், தென்னாப்பிரிக்க வீரர் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் மற்றும் மொயின் அலி இருவரும் பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் விளையாட பெயரைப் பதிவு செய்துள்ளதால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.