
டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மூன்று சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன.
நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடர் நேற்று முன் தினம் (ஜூன் 15) தொடங்கியது.
இந்த தொடரில் நேற்று (ஜூன் 16) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது.
3 சூப்பர் ஓவர்கள்; டி20 வரலாற்றில் முதல் முறை
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், ஆட்டம் டை ஆகி சூப்பர் ஓவர் வீசப்பட்டது.
சூப்பர் ஓவரில் நேபாளம் 19 ரன்கள் எடுக்க, நெதர்லாந்து அணியும் 19 ரன்கள் எடுக்க ஆட்டம் மீண்டும் டை ஆனது. இதனால், இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது.
இரண்டாவது சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 17 ரன்கள் எடுக்க, நேபாளத்துக்கு 18 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேபாளம் அணி 17 ரன்கள் மட்டும் எடுக்க இரண்டாவது முறையும் சூப்பர் ஓவர் டை ஆனது. இதனையடுத்து, மூன்றாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது.
மூன்றாவது சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நேபாளம் 0 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஸாச் லயன் கேச்ட் ரன்கள் கொடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி நேபாளத்தை வீழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.