பிரதமருக்கு அடுத்து செல்வாக்கு மிகுந்த நபர்கள் வரிசையில் ஷுப்மன் கில்: ஜோஸ் பட்லர்

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் குறித்து ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.
shubman gill
ஷுப்மன் கில் (கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இதனையடுத்து, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது.

ஜோஸ் பட்லர் கூறுவதென்ன?

இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் குணங்கள் கொண்டவராக உள்ளார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

jos buttler
ஜோஸ் பட்லர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் உண்மையில் மிகுந்த திறமை வாய்ந்த இளம் வீரர். பேசும்போது அவர் மிகவும் அமைதியானவராக உள்ளார். ஆனால், ஆடுகளத்தில் அவர் ஆக்ரோஷமானவராக இருப்பதாக நான் உணர்கிறேன். அவர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கலந்த கலவையாக உள்ளார்.

விராட் கோலி ஆக்ரோஷமாக செயல்படுபவர். அவர் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். ரோஹித் சர்மா மிகவும் அமைதியாக இருப்பார். இவர்கள் இருவருக்கும் நடுவில் ஷுப்மன் கில் இருக்கிறார். இவர்கள் இருவரிடமிருந்தும் ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொண்டுள்ளார். இருப்பினும், அவரது தனித்துவமான ஸ்டைலில் அணியை வழிநடத்துவார்.

இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவது மிகவும் கடினமான ஒன்று என நினைக்கிறேன். மிகவும் செல்வாக்கு வாய்ந்த நபர்கள் வரிசையில் பிரதமருக்கு அடுத்து மூன்றாவது அல்லது நான்காவது இடங்களில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனே இருப்பார் என நினைக்கிறேன். இந்தியாவில் உள்ள 150 கோடி மக்களும் கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளனர். அதனால், இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவது ஷுப்மன் கில்லுக்கு மிகவும் கடினமாக இருக்கப் போகிறது என நினைக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com