திணறிய டாப் ஆர்டர், காப்பாற்றிய மிடில் ஆர்டர்; நியூசி.க்கு 250 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் குவித்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர், அக்‌ஷர் படேல்
ஸ்ரேயாஸ் ஐயர், அக்‌ஷர் படேல்படம் | AP
Published on
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் குவித்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

திணறிய டாப் ஆர்டர், காப்பாற்றிய மிடில் ஆர்டர்

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில், 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 15 ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்‌ஷர் படேல் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. 128 ரன்களுக்கு இந்திய அணி அதன் 4-வது விக்கெட்டினை இழந்தது. அக்‌ஷர் படேல் 61 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். களமிறங்கியது முதலே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 98 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின் களமிறங்கிய கே.எல்.ராகுல் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். ஹார்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விரட்டினார். ரவீந்திர ஜடேஜா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹார்திக் பாண்டியா 45 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கைல் ஜேமிசன், வில்லியம் ஓ’ரூர்க், மிட்செல் சாண்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com