நியூசிலாந்து டி20 தொடரைக் குறிவைக்கும் ஐபிஎல்லைத் தவறவிட்ட தமிழக வீரர்கள்

டி20 தொடருக்கான இந்திய அணியில் புதிய வீரர்களும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெறாத மற்ற வீரர்களும்...
நடராஜன்
நடராஜன்

ஐபிஎல் 2021 போட்டி மூன்று தமிழக வீரர்களுக்குச் சாதகமாக அமையவில்லை.

நடராஜன், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர்.

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டார். நடராஜனுடன் தொடர்பில் இருந்த காரணத்துக்காக மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கரும் தனிமைப்படுத்தப்பட்டார். நடராஜனுக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 21 வயது வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை சன்ரைசர்ஸ் அணி தேர்வு செய்தது. விஜய் சங்கர் இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை.

இந்தியாவில் ஐபிஎல் 2021 போட்டி நடைபெற்றபோது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார் நடராஜன். இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன், முழங்கால் காயத்துக்குக் ஏப்ரல் மாத இறுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணியில் நடராஜன் இடம்பெறவில்லை. பிறகு முழு உடற்தகுதியடைந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றார் நடராஜன். துரதிர்ஷ்டவசமாக கரோனாவால் அவர் மட்டும் பாதிக்கப்பட, ஐபிஎல்-லிலும் விளையாட முடியாமல் போனது. 

வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்

இங்கிலாந்தில் இருந்தபோது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாகத் ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலக நேர்ந்தது. இதனால் டி20 உலகக் கோப்பைக்கும் அவர் தேர்வாகவில்லை. 

இந்நிலையில் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ள தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணியில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளார்கள். நடப்பு சாம்பியனான தமிழக அணி, போட்டி தொடங்கும் நவம்பர் 4 அன்று மஹாராஷ்டிரத்தை எதிர்கொள்கிறது.

விஜய் சங்கர்
விஜய் சங்கர்

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று முடிந்த மூன்று நாள்கள் கழித்து இந்தியாவில் நவம்பர் 17-ல் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் டி20 தொடர் தொடங்குகிறது. டி20 உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய வீரர்கள் அனைவரும் இந்த டி20 தொடரில் இடம்பெற மாட்டார்கள். இங்கிலாந்து தொடரை முடித்துவிட்டு ஐபிஎல், டி20 உலகக் கோப்பை எனத் தொடர்ந்து விளையாடி வருவதாலும் பல நாள்களுக்கு கரோனா தடுப்பு வளையத்தில் இருப்பதாலும் இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் டி20 தொடருக்கான இந்திய அணியில் புதிய வீரர்களும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெறாத மற்ற வீரர்களும் விளையாடவுள்ளார்கள். இந்த அணியில் இடம்பிடிக்க நடராஜன், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகிய மூவரும் தயாராகி வருகிறார்கள். சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் மூவரும் சிறப்பாக விளையாடினால் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com