டி20 உலகக் கோப்பையில் கலக்குவதற்கு ரிஷப் பந்த் தயாராகி வருவதாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பிரவின் அம்ரே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 43 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் கலக்குவதற்கு ரிஷப் பந்த் தயாராகி வருவதாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பிரவின் அம்ரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக விசாகப்பட்டினத்தில் இரண்டு வாரங்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. அங்கு வந்த ரிஷப் பந்த் இரண்டு வாரங்களாக அவரை தயார்படுத்திக் கொண்டார். அதன்பின் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியது அவரது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது.
இன்று அவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்தோம். ஆட்டத்தை முடித்துக் கொடுப்பது என்பது மிகவும் முக்கியமானது. ரிஷப் பந்த் தனியொருவராக அனுபவம் வாய்ந்த மோஹித் சர்மாவுக்கு எதிராக 20-வது ஓவரில் 31 ரன்கள் குவித்தார். அவரது இந்த அதிரடியான ஆட்டமே அவர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார் என்பதற்கு சான்று என்றார்.