

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். கே.எல்.ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 9 ரன்கள் எடுத்தும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 19 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, டி காக் மற்றும் கேப்டன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. டி காக் அரைசதம் எடுத்தார். அவர் 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய பூரன் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய க்ருணால் பாண்டியா 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் லக்னௌ 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் சாம் கரண் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா மற்றும் ராகுல் சஹார் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.