டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடத்தப்பட உள்ளன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: ஏப்ரல் இறுதியில் ஐபிஎல் தொடரின் ஒரு பாதி நிறைவு பெற்றுவிடும் என்பதால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் விளையாடிய போட்டிகளிலிருந்து வீரர்களின் செயல்பாடு, உடல் தகுதி ஆகியவற்றை தேர்வுக் குழு உறுப்பினர்கள் மதிப்பிட முடியும். லீக் போட்டிகள் முடிந்தவுடன், இந்திய அணி வீரர்கள் சிலர் நியூயார்க் செல்ல வேண்டியிருக்கும். ஐபிஎல் தொடரின் கடைசி 4 போட்டிகளில் விளையாடாத வீரர்கள் உடனடியாக நியூயார்க் செல்வர் எனத் தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்க மே 1 ஆம் தேதி வரை ஐசிசி கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், மே 25 ஆம் தேதி வரை அணியில் உள்ள வீரர்களில் மாற்றம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.