
ஐபிஎல் தொடரில் லக்னௌ அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் ஃபிரேசர் மற்றும் அபிஷேக் போரல் களமிறங்கினர். தில்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜேக் ஃபிரேசர் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் அபிஷேக் போரல் மற்றும் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடியது. இருப்பினும், ஷாய் ஹோப் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அபிஷேக் போரல் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன்பின் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது. ரிஷப் பந்த் 33 ரன்களில் ஆட்டமிழந்ததும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். அதிரடியாக விளையாடிய அவர் 25 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் தில்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்துள்ளது. லக்னௌ தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும், அர்ஷத் கான் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.