பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னௌ த்ரில் வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னௌ த்ரில் வெற்றி!
படம் | AP
Published on
Updated on
2 min read

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ அணி முதலில் விளையாடியது.

மார்ஷ், பூரன் அதிரடி

முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். லக்னௌ அணி 99 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய அய்டன் மார்க்ரம் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இதனையடுத்து, மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தனர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷுடன் இணைந்து தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் நிக்கோலஸ் பூரன். அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். நிக்கோலஸ் பூரன் 36 பந்துகளில் 87 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளையும், ஆண்ட்ரே ரஸல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

லக்னௌ த்ரில் வெற்றி

239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் அஜிங்க்யா ரஹானே 35 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, வெங்கடேஷ் ஐயர் 45 ரன்களும், ரிங்கு சிங் 38 ரன்களும் எடுத்தனர். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடிய போதிலும், அவரது அதிரடி அணியின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை.

லக்னௌ தரப்பில் ஆகாஷ் தீப் மற்றும் ஷர்துல் தாக்குர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆவேஷ் கான், திக்வேஷ் சிங் ரதி மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com