
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழல் முடிவுக்கு வந்ததையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நாளை (மே 17) முதல் நடத்தப்பட உள்ளன.
மிட்செல் ஜான்சன் வலியுறுத்தல்
ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது தொடர்பான முடிவை தனிப்பட்ட வீரர்களிடமே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விட்டுவிட்டது. வீரர்கள் எடுக்கும் முடிவு என்பது மிகவும் முக்கியம். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதால் நிறைய பணம் ஈட்ட முடிந்தாலும், அது வெறும் போட்டியே. இந்த மாதிரியான சூழலில் முடிவெடுக்கும் இடத்தில் நான் இருந்தால் எனது முடிவு மிகவும் எளிமையானது. மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக நான் மீண்டும் செல்ல மாட்டேன். காசோலைகளைக் காட்டிலும் உயிர் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியம். ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டேன் எனக் கூறுவது என்னுடைய தனிப்பட்ட கருத்தே. இதனால், வீரர்கள் யாரும் தங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்றார்.
ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக வெளிநாட்டு வீரர்கள் பலரும் மீண்டும் இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். மீண்டும் தொடங்கப்படும் ஐபிஎல் தொடரின் நாளைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.