கொல்கத்தா
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாவது நாளான இன்று, நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவக்கியுள்ள இந்தியாவும் தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 316 ரன் குவித்தது. புஜாரா 87 ரன்னும், ரகானே 77 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டும், போல்ட், வாக்னர், ஜித்தன் பட்டேல் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது. வாட்லிங் 12 ரன்னும், ஜித்தன் பட்டேல் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடந்தது. இருவரும் இந்திய பந்துவீச்சை திறமையுடன் எதிர்கொண்டு விளையாடினார்கள். நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்னில் இருந்த போது மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறினார்கள். இருவரது திறமையான ஆட்டத்தால் நியூசிலாந்து சரிவில் இருந்து சற்று மீண்டது.
ஜித்தன் பட்டேல் 47 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 182 ஆக இருந்தது. இந்த ஜோடி 14.5 ஓவரில் 60 ரன் எடுத்தது. அடுத்து சிறிது நேரத்தில் 9 விக்கெட்டாக வாட்லிங் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை சமி கைப்பற்றினார். நியூசிலாந்து அணி 53 ஓவரில் 204 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா நியூஸிலாந்தைவிட 112 ரன் அதிகம் பெற்றுள்ளது.
பின்னர் தனதுஇரண்டாவது இன்னங்க்ஸை தொடங்கிய இந்தியாவும் விரைவில் விக்கெட்டுகளை இழந்து வருகிறது. 29 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 102 ரன்கள் எடுத்துள்ளது. அதகப்பட்சமாக கோலி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். களத்தில் அஸ்வினும், ரோகித் சர்மாவும் உள்ளனர்.