ரோஹித் சதம் வீண்: 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 
புகைப்படம்:  டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
Published on
Updated on
1 min read


ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. 

இதைத்தொடர்ந்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தவான் (0), கோலி (3), ராயுடு (0) என அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 4 ரன்களுக்குள் 3 ரன்களை இழந்து திணறியது. இதையடுத்து, ரோஹித் சர்மாவும், தோனியும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். 

ரோஹித் தொடக்கத்தில் நிதானத்தை வெளிப்படுத்தினாலும், அதன்பிறகு சற்று துரிதமாக ரன் குவிக்கத் தொடங்கினார். இதன்மூலம், அவர் அரைசதத்தை எட்டினார்.  மறுமுனையில், அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து பொறுமையாக விளையாடி வந்த தோனி 93 பந்தில் அரைசதத்தை கடந்தார். 

இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், நடுவரின் தவறான தீர்ப்பால் தோனி 51 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து, களமிறங்கிய கார்த்திக்கும் துரிதமாக ரன் குவிக்க திணற வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 10-ஐ கடந்தது. இதனால், ரோஹித் சர்மா நெருக்கடிக்குள்ளானார். 

இந்திய அணியின் டாப் ஆர்டரை மிரட்டிய ரிச்சர்ட்சன் மீண்டும் பந்துவீச்சில் மிரட்டினார். அவருடைய பந்தில் கார்த்திக் 12, ஜடேஜா 8 ரன்களுக்கு வெளியேற இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறைந்துகொண்டே இருந்தது. 

இதனிடைய தொடக்கம் முதல் விளையாடி வந்த ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 22-ஆவது சதத்தை அடித்து ஆறுதல் அளித்தார். சதம் அடித்த பின்னர் துரிதமாக ரன் குவிக்க தொடங்கிய ரோஹித் சர்மா இந்திய அணியின் வெற்றிக்கு தனிநபராக போராடினார். எனினும், அவர் 133 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டாய்னிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரி, 6 சிக்ஸர் அடங்கும். இந்த விக்கெட் மூலம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியானது. 

இதன்பிறகு, புவனேஷ்வர் குமார் ஓரளவு அதிரடி காட்டினார். ஆனால், அது இந்திய அணியின் பலனளிக்கவில்லை.  

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த புவனேஷ்வர் குமார் 29 ரன்கள் எடுத்தார்.   

ஆஸ்திரேலிய அணியின் சார்பில், ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளும், பெஹ்ரென்டோர்ஃப் மற்றும் ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளும், சிடில் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com