
வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீவ் ராட்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
2019 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேச அணி லீக் சுற்றுகளுடன் வெளியேறியது மட்டுமல்லாமல், புள்ளிப்பட்டியலிலும் 8-ஆவது இடம் பிடித்தது. தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் மட்டுமே வெற்றிபெற்றது. இதில் 606 ரன்கள் குவித்தும், 11 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷகிப் அல் ஹசன் ஆட்டம் மட்டுமே ஆறுதலாக அமைந்தது.
இந்நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீவ் ராட்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2018-ல் ஏற்படுத்தப்பட்ட 2 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1 வருட பதவிக் காலம் மீதமிருக்கும் நிலையில், அவரை நீக்கி வங்கதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்முடிவு இருதரப்பில் சுமூகமாக பேசி எடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இருப்பினும் ராட்ஸின் பயிற்சி செயல்பாடுகளில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறுது.
வங்கதேச அணி அடுத்து இலங்கையுடன் நடைபெறும் தொடரில் பங்கேற்கிறது. இதனிடையே பேட்டிங் பயிற்சியாளர் நீல் மெக்கன்ஸி, காலவரையற்ற விடுப்பு எடுத்துச் சென்றுவிட்டார். இதனால் அவர் இந்த தொடரில் பயிற்சியளிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
அதுபோன்று பந்துவீச்சுப் பயிற்சியாளர் கோர்ட்னி வால்ஷ், சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி மற்றும் ஃபிஸியோ திஹன் சந்திரமோகன் ஆகியோரது பதவிக்காலமும் உலகக் கோப்பையுடன் முடிவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.