மே.இ. தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய ஏ அணிக்கு ஏற்பட்ட சரிவைத் தடுத்து நிறுத்தியுள்ளார்கள் ஷிவம் டுபேவும் சஹாவும்.
நார்த் சவுண்டில் நடைபெற்றும் வரும் இந்த ஆட்டத்தில் மே.இ. தீவுகள் ஏ அணி முதல் இன்னிங்ஸில் 228 ரன்கள் எடுத்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய ஏ அணி, 168 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி முன்னிலை பெறுமா என்கிற கேள்வி எழுந்தது.
ஆனால் 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் சஹாவும் ஷிவம் டுபேவும் சிறப்பாக விளையாடி சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். இந்திய ஏ அணியின் ஸ்கோர் 292 ரன்களாக உயர்ந்தபோது 71 ரன்களில் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஷிவம் டுபே. சஹா 61 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
2-ம் நாளின் முடிவில் இந்திய ஏ அணி, 99 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அந்த அணி 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 71 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.