டி20 உலகக் கோப்பையில் தோனி விளையாட வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை வைக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் இருந்தார்கள். ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறினார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தார் தோனி.
தோனியின் ஓய்வு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியதாவது:
2021 டி20 உலகக் கோப்பையில் தோனி விளையாடியிருக்க வேண்டும். பிரபலங்களுக்கு இந்தியா ஆதரவளிப்பதை வைத்துப் பார்க்கும்போது அவரை டி20 உலகக் கோப்பையில் ஆட வைத்திருக்க வேண்டும். ஆனால் ஓய்வு பெற வேண்டும் என்பது தோனியின் தனிப்பட்ட முடிவு.
ஒருவேளை, டி20 உலகக் கோப்பையில் தோனி விளையாட வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை வைக்கலாம். இது நடக்க வாய்ப்புண்டு. 1987-க்குப் பிறகு கிரிக்கெட்டை விட்டு விலகக் கூடாது என்று ஜெனரல் ஜியா உல் ஹக் இம்ரான் கானிடம் கேட்டுக்கொண்டார். அவரும் அதன்பிறகு விளையாடினார். பிரதமரிடம் முடியாது எனச் சொல்ல முடியாது. எனவே டி20 உலகக் கோப்பையில் தோனி விளையாட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.