டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்பு போல வெளிநாட்டு நடுவர்கள் பணியாற்ற வேண்டும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக டெஸ்ட் போட்டி நடக்கும் நாடுகளைச் சேர்ந்த நடுவர்களே கடந்த ஒரு வருடமாகப் பணியாற்றி வருகிறார்கள். அதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு வெளிநாட்டு நடுவர்கள் பணியாற்றுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு நடுவர்கள் பணியாற்றுவது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர். அவர் கூறியதாவது:
2-3 முறையீடுகள் தீர்ந்த பிறகு வெளிநாட்டு நடுவர்கள் அவசியம் என உணரத் தோன்றுகிறது. அதற்குப் பிறகும் சில முடிவுகளால் ஆட்டத்தில் மாற்றம் ஏற்படலாம். தவறான முடிவுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வெளிநாட்டு நடுவர்கள் அவசியம். அதேசமயம், இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ளூர் நடுவர்கள் அற்புதமாகச் செயல்பட்டார்கள். நாங்கள் விளையாடும் காலத்தில் அதுபோல சொல்ல முடியாது என்றார்.