நீண்ட நாளைக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இளம் வீரர் பிரித்வி ஷா கூறியுள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் ஆட்டம் ஜூலை 18 அன்று தொடங்குகிறது.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் பிரித்வி ஷா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நீண்ட நாளைக்குப் பிறகு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் என் மனத்தில் உள்ளது. இந்தியா அல்லது வேறு எந்த அணியில் நான் விளையாடினாலும் அணியின் நலன் தான் எனக்கு முக்கியம். இந்திய அணிக்காக இந்தத் தொடரை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன்.
தில்லி கேபிடல்ஸ் அணியில் நானும் ஷிகர் தவனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குகிறோம். அதற்கு முன்பே நாங்கள் நல்ல நண்பர்கள்தாம். இப்போது எங்களிடையேயான நட்பு இன்னும் நெருக்கமாகிவிட்டது. இந்தப் பிணைப்பை ஆடுகளத்திலும் காண முடியும். அவருடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது என்றார்.