ஆஷஸ் 2-வது டெஸ்டில் இருந்து காயம் காரணமாக விலகிய ஹேசில்வுட்டுக்குப் பதிலாக ஜை ரிச்சர்ட்சன் விளையாடுவார் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஆஸி. அணி எளிதாக வென்றது.
2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஆஷஸ் தொடரில் நடைபெற்ற 335 டெஸ்டுகளில் 136-ல் ஆஸ்திரேலியாவும் 108-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 91 டெஸ்டுகள் டிரா ஆகியுள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.
முதல் டெஸ்டின்போது பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அடிலெய்ட் பகலிரவு டெஸ்டிலிருந்து அவர் விலகியுள்ளார். மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்டில் பங்கேற்கவுள்ளார்.
2-வது டெஸ்ட், நாளை (டிசம்பர் 16) நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் ஆஸி. அணியில் இடம்பெறுவார் என கேப்டன் கம்மின்ஸ் அறிவித்துள்ளார். மேலும் முதல் டெஸ்டில் காயமடைந்த டேவிட் வார்னர், 2-வது டெஸ்டில் விளையாடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.