சஹாலை எந்த அணி தேர்வு செய்யும்?: ஆகாஷ் சோப்ரா

சுழற்பந்து வீச்சாளர் சஹாலைப் புதிய ஐபிஎல் அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
சஹால் - கோலி
சஹால் - கோலி

சுழற்பந்து வீச்சாளர் சஹாலைப் புதிய ஐபிஎல் அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லக்னெள அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பிரபல முன்னாள் வீரர் ஆன்டி ஃபிளவரும் ஆலோசகராக இருமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டனான கெளதம் கம்பீரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் ஆர்சிபி அணியில் விளையாடிய பிரபல வீரர் சஹாலை இரு புதிய அணிகளில் ஏதாவது ஒன்று தேர்வு செய்துகொள்ளும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். தன்னுடைய யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது:

நியாயமாகச் சொல்வதென்றால் சஹாலுக்கான உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. ஆர்சிபி அணி அவரைத் தக்கவைத்துக்கொள்ளவில்லை. டிராஃப்ட் முறையில் புதிய அணிக்கு, ஒருவேளை ஆமதாபாத் அணிக்கு சஹால் தேர்வாகலாம். இல்லாவிட்டால், ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வு செய்வார்கள். விஜய் சஹாரே போட்டியில் விளையாடிய எல்லா ஆட்டங்களிலும் சிறப்பாகப் பந்துவீசி குறைவான ரன்களைக் கொடுத்தார் என்றார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com