ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 5-வது முறையாகக் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
தோஹாவில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 42-ம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, 22-ம் இடத்தில் உள்ள பெரு அணியை பெனால்டி ஷுட் அவுட் முறையில் 5-4 எனத் தோற்கடித்தது. இதற்கு முன்பு ஆஸி. அணி, 2-1 என ஐக்கிய அரபு அமீரகத்தைத் தோற்கடித்தது.
2022 கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறும் என ஃபிஃபா அமைப்பு 2010 டிசம்பரில் அறிவித்தது. நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தோஹாவைச் சுற்றியுள்ள 8 மைதானங்கள் இப்போட்டிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ஃபிஃபா 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-ல் ரஷியாவில் முதல்முறையாக நடைபெற்றது. தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் பெற்றுள்ளன. இப்போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.