காயம் காரணமாக வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் அந்த அணிக்கான கடைசி லீக் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
உலகக் கோப்பையில் நேற்றையப் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு இடது கையின் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. அதன்பின் அவருக்கு நிழற்படம் (எக்ஸ்-ரே) எடுத்துப் பார்க்கப்பட்டதில் கை விரலில் எலும்பு முறிவு உறுதியானது.
இந்த நிலையில், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக வங்கதேச அணியின் மருத்துவக் குழு தரப்பில் கூறியதாவது: வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு கை விரலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவர் வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டு அணிக்காக பேட் செய்தார். போட்டி முடிவடைந்த பிறகு அவருக்கு உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் அவருக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அவர் குணமடைய 3-4 வாரங்கள் ஆகும். அவர் இன்று வங்கதேசம் புறப்படுகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உலகத் தரவரிசையில் முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணி!
உலகக் கோப்பையில் தனது கடைசி லீக் போட்டியில் வங்கதேசம் வருகிற நவம்பர் 11 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.