நாம் மிகவும் அதிகமாக உணர்ச்சிப்படுவதாக உலகக் கோப்பை தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பேசியுள்ளார்.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடர் ஒரு வாரத்துக்கு முன்பு நிறைவடைந்தது. இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் ஆனது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்று அசைக்க முடியாத அணியாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் அதிர்ச்சித் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.
இதையும் படிக்க: விராட் கோலி ஆட்டமிழந்தபோது நூலகமாக மாறிய மைதானம்: பாட் கம்மின்ஸ்
இந்த நிலையில், நாம் மிகவும் அதிகமாக உணர்ச்சிப்படுவதாக உலகக் கோப்பை தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்திருந்தால் அது ஏமாற்றத்தில் முடிகிறது. நாம் சமநிலையில் இருக்க வேண்டும். மற்ற அணிகளும் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்று கோப்பையை வெல்லும் கனவோடுதான் இந்தியாவுக்கு வருகை புரிந்தனர். அதனால், இந்த தோல்வியை மிகவும் பெரிதுபடுத்திக் கொண்டு இருக்கக் கூடாது. விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும்.
இறுதிப்போட்டியன்று எந்த அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றாலும் அதன் வெற்றியை நாம் மதிக்க வேண்டும். நாம் மிகவும் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறோம். இந்திய அணி இழந்ததை நினைத்து கவலைப்படாமல் அவர்கள் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார்.