விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் எக்ஸ் வலைத்தளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் வலைத்தளத்தில் விராட் கோலி பதிவிட்டிருப்பதாவது: எங்களது இதயங்களில் மகிழ்ச்சியும் அன்பும் முழுவதுமாக நிறைந்துள்ளது. எங்களுக்கு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எங்களது குடும்பத்தின் புது உறுப்பினரான வாமிகாவின் சகோதரன் அக்காயை இந்த உலகத்துக்கு வரவேற்கிறோம்.
எங்களது வாழ்வின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களையும் எங்களுக்கு வழங்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இந்த தருணத்தில் எங்களது தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்கும் படி உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம். அன்புடன் விராட் மற்றும் அனுஷ்கா எனப் பதிவிட்டுள்ளார்.