
சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசி எஸ்டோனியா வீரர் சஹில் சௌகான் சாதனை படைத்துள்ளார்.
எஸ்டோனியா மற்றும் சைப்ரஸ் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சைப்ரஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது.
192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய எஸ்டோனியா அணிக்கு தொடக்கம் பேரதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் களமிறங்கிய சஹில் சௌகான் அதிரடியில் மிரட்டினார். சைப்ரஸ் அணியின் பந்துவீச்சாளர்களை தனது அதிரடியான ஆட்டத்தால் திணறடித்த சௌகான், மைதானத்தில் சிக்ஸர் மழையைப் பொழிந்தார்.
அதிரடியாக விளையாடிய சஹில் சௌகான் 27 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 41 பந்துகளில் 144 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 18 சிக்ஸர்கள் அடங்கும். இதற்கு முன்னதாக, நமீபியாவின் ஜேன் நிக்கோல் லாஃப்டீ ஈட்டன் 33 பந்துகளில் சதம் விளாசியதே சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதமாக இருந்தது. அந்த சாதனையை சஹில் சௌகான் தற்போது முறியடித்துள்ளார்.
ஒட்டுமொத்த டி20 போட்டிகளிலும் சஹில் சௌகான் 27 பந்துகளில் அடித்துள்ள இந்த சதமே அதிவேக சதமாக உள்ளது. இதற்கு முன்னதாக, டி20 போட்டிகளில் கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதம் அடித்ததே அதிவேக சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.