
பாகிஸ்தான் அணியுடன் இருந்து உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள் என பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவில்லை. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததும்,அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
பாகிஸ்தான் அணிக்குள் வீரர்கள் மூன்று பிரிவுகளாக செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் இன்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியுடன் இருந்து உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள் என பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: பாகிஸ்தான் அணியுடன் உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள் கேரி கிறிஸ்டன். இந்திய அணிக்கு மீண்டும் பயிற்சியாளராக வாருங்கள். கேரி கிறிஸ்டன் போன்றவர்கள் கிடைப்பது மிகவும் அரிது. மிகச் சிறந்த பயிற்சியாளர், ஆலோசகர் மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களின் நல்ல நண்பர். எங்களுக்கு 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்த வெற்றி பயிற்சியாளர் எனப் பதிவிட்டுள்ளார்.
கேரி கிறிஸ்டன் அண்மையில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.