ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 போட்டிகளில் 712 ரன்கள் குவித்து அசத்தினார். பிப்ரவரி மாதத்தில் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த நபர் என்ற வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவர் 2 இரட்டை சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடித்தார். இந்த நிலையில், ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்ற ஜெய்ஸ்வால் பேசியதாவது: ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற பல விருதுகளை வெல்வேன் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.
ஐசிசி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மற்றும் இலங்கை வீரர் பதும் நிசங்கா இடம்பெற்றிருந்த நிலையில் ஜெய்ஸ்வால் இந்த விருதினை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.