சென்னை: கமலுக்கு கண்ணில் கோளாறு உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த சுற்றுப் பயணத்தை முதல்கட்டமாக ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து பின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், ”மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்கிகிறேன் கரம் கோர்த்திடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னோட்டமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று திமுக தலைவர் கருணாநிதியினைச் சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்துப் பெற்றார். நாளை மதுரையில் நடைபெற உள்ள கூட்டத்திற்காக கமல் தற்பொழுது மதுரைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் கமலுக்கு கண்ணில் கோளாறு உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதியுடனான கமலின் சந்திப்பு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் இதுகுறித்துக் கேட்கப்பட்ட பொழுது அவர் கூறியதாவது:
நாங்கள் ஊழல் செய்கிறோம் என்று கமல் தெரிவித்துள்ளார். ஆனால் திமுக? ஊழலின் மொத்த உருவமாக விளங்குதே அக்கட்சிதான். இந்தியாவிலேயே ஊழல் செய்ததற்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். 1976-இல் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் திமுகவின் ஊழல் பற்றித் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டது.
இப்படி இருக்க திமுக தலைவர் கருணாநிதியினைச் சென்று சந்திப்பது என்றால் கமலுக்கு கண்ணில் கோளாறு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.