கரோனா கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான அவசியம் தற்போது எழவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. உலகத்தின் 110 நாடுகளுக்கு மேலாக கரோனா தொற்றின் பரவல் கூடிக்கொண்டே இருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கடந்த 2 நாட்களுக்கு முன்னால் 110 நாடுகளுக்கு மேலாக பயமுறுத்திக் கொண்டிருக்கிற இந்த கரோனா பாதிப்பு என்பது இப்போது கூடுதலாக பரவி இருக்கிறது.
தற்போது பிஎ4, பிஎ5 என்கின்ற ஒமைக்கரானின் புதிய வகை தொற்று பரவி இருக்கிறது என்கின்ற செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவிலும் கூட 10 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 1000த்திலிருந்து 5000 வரை கடந்த 24 மணி நேரத்தில் உயர்ந்து இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்றைக்கு 2,622 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் 14,504 பேர் ஆக்டிவ் கேஸ் என்கின்ற வகையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதையும் படிக்க- செருப்பு மாலையுடன் கணவரை தூக்கிச் சுமந்த பழங்குடியினப் பெண்
முதல்வர், பொருளாதார ரீதியிலான சரிவு வந்துவிடக்கூடாது என்பதற்காக பொதுக்கட்டுப்பாடு தற்போது தேவையில்லை என்று கூறியுள்ளார். கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து அதற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என்கின்ற வகையில் தமிழக அரசு சார்பில் அனைத்து இடங்களிலும் இந்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. பெரும்பகுதியாக தமிழகத்தில் பாதிப்புக்குள்ளான 14,504 பேர்களில் வீடுகளில் 95 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.
மத்திய அரசின் விதிமுறைகள் என்பது பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது 5 சதவீதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான அவசியம் தற்போது எழவில்லை.
முகக்கவசம் அனிந்து கொள்வது என்பது நம்மை நாம் தற்காத்துக் கொள்வது, முகக்கவசம் மற்றும் தடுப்பூசி போடுவது சிறந்த தடுப்பு நடவடிக்கையாக உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது என்றார்.