எடப்பாடி பழனிசாமியையும் கே.பி. முனுசாமியையும் கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர் செல்வம், 'கழக சட்ட விதிப்படி ஒன்றரை கோடி தொண்டர்கள், கழக ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்துள்ளார்கள். என்னை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கோ கே.பி. முனுசாமிக்கோ அதிகாரமில்லை.
நான் இன்று அறிவிக்கிறேன், எடப்பாடி பழனிசாமியையும் கே.பி. முனுசாமியையும் கழக சட்ட விதிக்கு புறம்பாக தன்னிச்சையாக அறிவித்ததற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டு கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குகிறேன்' என்று தெரிவித்தார்.
மேலும், கழக விதிப்படி நீதிமன்றத்திற்குச் சென்று தொண்டர்களுடன் இணைந்து உரிய நீதியைப் பெறுவோம் என்றும் கூறினார்.
முன்னதாக பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார், மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.