44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் பிரதமர் நரேந்திரமோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன இந்த நிலையில் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது சிறப்புவாய்ந்ததாகும். மிகக்குறுகிய காலத்தில் மிகச்சிறப்பான ஏற்பாட்டை செய்துள்ளனர். 44ஆவது செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் முதன்முறையாக நடைபெறுகிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டிலிருந்து பல செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். தமிழ்நாட்டிற்கும், செஸ் விளையாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்தப் போட்டியின் மூலம் இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் மேம்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டியும் இன்று பிரிட்டனில் தொடங்கியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா உங்களை அன்புடன் வரவேற்கிறது” எனக் குறிப்பிட்டார்.