நாட்டில் ஒரு தேசியமொழி சாத்தியமில்லை: முதல்வர் ஸ்டாலின்

நாட்டில் ஒரு தேசிய மொழி என்பது சாத்தியமில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுபவர்கள் நாட்டின் எதிரிகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்


நாட்டில் ஒரு தேசிய மொழி என்பது சாத்தியமில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுபவர்கள் நாட்டின் எதிரிகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கேரளம் மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ்  சார்பில் நடைபெற்ற ‘இந்தியா - 75’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

அப்போது,  மலையாள மனோரமா இதழில் சார்பில் நடைபெறும் ‘இந்தியா - 75 ஆண்டுகள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் காணொலி மூலமாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மலையாள மனோரமா இதழானது 1890-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று இந்தியா முழுமைக்கும் அதிகமான வாசகர்களைக் கொண்ட இதழாக இருக்கிறது. மலையாள மனோரமா செய்தி நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. வெறும் செய்தி நிறுவனமாக மட்டுமல்லாமல் தனக்கென ஒரு கொள்கை, கோட்பாடு கொண்ட நிறுவனமாக இருந்ததால் பல்வேறு சோதனைகளைச் சந்தித்த செய்தி நிறுவனம். அத்தகைய துணிச்சல்தான் இந்தளவுக்கு இந்த நிறுவனத்தை வளர்த்துள்ளது.

கேரளத்தை பொறுத்தவரையில், மலையாள மனோரமா என்பது பெரும்பாலானவர் குடும்பத்தில் ஓர் அங்கம் என்று சொல்லத்தக்க நிலையை அடைந்துள்ளது. அத்தகைய பெருமைமிகு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கூட்டாட்சி, மாநிலத் தன்னாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், சமூகநீதி
இவற்றை நாம் வலிமைப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் காப்பாற்றுவதுதான், நாட்டை காப்பாற்றுவது ஆகும்.

75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது என்பது வெறும் கொண்டாட்டமாக இருக்கக் கூடாது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையோடு இருப்பதற்கான திட்டமிடுதலாக நமது சிந்தனைகள் அமைய வேண்டும்.

நாடு என்பதை வெறும் நிலப்பரப்பின் எல்லைகளாக நாம் கருதக் கூடாது. நாடு என்பது இங்கு வாழும் மக்கள்தான்.

இந்தியா என்பது ஒற்றை அரசு அல்ல. பல்வேறு மாநில அரசுகளின் கூட்டுதான் இந்திய அரசு.

அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை வரையறுக்கப் பயன்படுத்தும் சொல் யூனியன்தான். 

நாட்டை காப்பாற்ற வேண்டுமானால் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் நாடு காப்பாற்றப்படும்.

தமிழ்நாட்டின் மாபெரும் அடையாளமான பேரறிஞர் அண்ணா கூறியது போல, ஒற்றைத்தன்மையைத் திணிப்பதன் மூலம் ஒற்றுமையைக் கொண்டுவர முடியாது. 

இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழி ஆக முடியாது. ஏனென்றால் இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருக்கின்றன. இந்தியாவுக்கு ஒற்றை மதம், அனைவருக்குமான மதமாக இருக்க முடியாது. ஏனென்றால், இந்தியாவில் பல்வேறு மத வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. இந்தியாவில் ஒற்றைப் பண்பாடு இல்லை.

உணவு, உடை அனைத்திலும் ஆயிரம் வேறுபாடுகள். இவ்வளவு வேற்றுமைகளை வைத்துக் கொண்டும் ஒன்றாக வாழ நமக்குள் இருப்பது அன்பும் மனிதநேயமும் மட்டும்தான். 

ஒற்றை மொழியை-ஒற்றை மதத்தை-ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்க நினைப்பவர்கள் நாட்டின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறார்கள்.

இந்திய ஒற்றுமையைச் சிதைக்க நினைப்பவர்கள் இந்திய மக்களின் எதிரிகள். இந்தத் தீய சக்திகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை. வலிமையான அதிகாரம் பொருந்திய, தன்னிறைவு பெற்றவையாக மாநிலங்கள் இருப்பது நாட்டுக்கு வலிமைதானே தவிர, அது பலவீனமல்ல.

வலிமையான, வசதியான, தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களால் நாட்டுக்கு பயன்மட்டுமே.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 சதவீதமாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, நாட்டு முழுமைக்கும்தானே நன்மை கிடைக்கிறது?

மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவீதம். தமிழ்நாட்டின் பங்கு என்பது நாட்டுக்கும்தானே நன்மை?

மாநில அரசுகள் மிகச்சிறப்பாக மாநிலங்களை வழிநடத்துவதால் மத்திய அரசு பலம் அடையுமே தவிர, பலவீனம் அடையாது. இன்னும் சொன்னால், மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவை மாநில அரசுகள்தான்.

மக்களின் அனைத்து அன்றாடத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. எனவே, மாநில அரசுகளைத் தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால்தான் நாடு மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு மாநிலங்கள் தன்னாட்சி உரிமை கொண்டவையாக இருக்க வேண்டும்.

மத்திய அரசானது கூட்டாட்சிக் கோட்பாட்டை மதித்துச் செயல்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஒற்றைத் தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றும் முயற்சியை நாம் ஏற்க முடியாது. அதனை வலிமையாக, உறுதியாக, ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

பல்வேறு சிந்தனைகள் மோதும் களமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றங்களில் பேசுவதற்கான உரிமை அதன் உறுப்பினர்களுக்கே மறுக்கப்படுகிறது. திமுக உறுப்பினர்கள் உள்பட 27 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.

கருத்தைச் சொல்வதற்கான களமான நாடாளுமன்றத்தில்கூட பேச உரிமை இல்லை. இதுதான் இந்திய மக்களாட்சியின் இன்றைய நிலை.

சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக மாநிலங்களின் நிதி உரிமை பறிக்கப்பட்டு விட்டது. இழப்பீடாக தரப்படும் நிதி உரிய நேரத்தில் தரப்படுவது இல்லை. முழுமையாகவும் தருவது இல்லை.

நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் எளியோருக்குக் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியைப் பல்வேறு படிநிலைகளில் தடுப்பு போட்டு மறிக்கும் கொள்கையாக உள்ளது. மத்திய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோதச் சட்டங்களாக இருக்கின்றன.

ஆளுநர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு. இவை அனைத்துக்கும் இடையில்தான் மாநிலங்களில் ஆட்சி நடத்தியாக வேண்டும், அரசியல் நடத்தியாக வேண்டும், மக்கள் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாக வேண்டும். அதற்காக நான் நம்பிக்கை இழக்கவில்லை.

நாட்டின் மிக நீண்ட வரலாறும், நாட்டு மக்களின் சகோதர உணர்வும், நாட்டை நிச்சயம் காக்கும் என்று நான் நம்புகிறேன்.

மலையாள மனோரமா போன்ற இதழ்களுக்கு தங்களது ஊடகப் பணியைத் தாண்டி நாட்டை காக்கும் பணி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

75 ஆண்டுகள் இந்தியாவைக் காத்த அரசியல் நெறிகளைக் காக்க ஜனநாயக சக்திகளோடு இணைந்து ஊடகங்களும் கருத்துப் பிரசாரத்தை தொடர வேண்டும்.

75 ஆண்டுகளுக்கு முன்பு மாநில முதல்வர்களுக்கு அன்றைய பிரதமர் நேரு கடிதம் எழுதியபோது, “மிக நீண்டகால நன்மையாக இருந்தாலும், குறுகிய கால நன்மையாக இருந்தாலும் நாட்டுக்கு ஜனநாயகமே பொருத்தமானது. இந்திய தேசத்துக்கு மட்டுமல்ல எந்த நாட்டுக்கும் ஜனநாயகமே பொருத்தமானது என்று சொன்னார்.

அத்தகைய ஜனநாயக விழுமியங்கள் கொண்ட நமது இந்தியாவை எந்நாளும் பாதுகாக்க நம்மை அர்ப்பணிப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com