தமிழகத்தில் கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 100% கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 26 ஆவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
'தமிழகத்தில் கடலூர், கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களில் 100% கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வெளிநாட்டவர்களும் தடுப்பூசி போட்டுள்ளதால் தடுப்பூசி போடப்பட்டோர் விகிதம் 115% ஆக உள்ளது.
சென்னையில் 55,30,900 பேரில் 99%, பேர் முதல் தவணை தடுப்பூசியும் 81% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
உலக நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் கொரோனா 4-வது அலை பரவ வாய்ப்புள்ளது. கரோனா 4-வது அலையைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு' என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.