ராமேசுவரம்: ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சி மடம் பகுதியில் முகமது யூசுப் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை செய்தனர். அவரிடம் இருந்த கைபேசியை மட்டும் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் தர்கா பேருந்து நிலையத்தில் அருகே வசித்து வருபவர் முகமது யூசுப். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் செளதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக இவருடைய வங்கிக் கணக்கில் வெளிநாட்டு பணம் பரிமாற்றம் நடந்ததாக என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் ராமேசுவரம் டி.எஸ்.பி உமாதேவி தலைமையில் என்ஐஏ (தேசிய புலனாய் முகமை) அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை முகமது யூசுப் வீட்டில் வந்து சோதனை நடத்தினர்.
சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்ற விசாரனையில் செளதியில் இருந்த போது ஏதேனும் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். மேலும் அவர் பயன்படுத்தி வந்த கைபேசியை என்ஐஏ அதிகாரிகள் வாங்கி சென்றனர்.
இந்த சோதனையின் போது அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.